நல்லவனுக்கு காலமில்லை

இது என்னடா புதுக்கதை என்று நினைக்க வேண்டாம். இது எல்லோரும் கூறுகின்ற பொதுக்கதைதான். இந்த உலக வாழ்வில் பல அம்சங்கள் விதி என்ற நிர்ப்பந்தத்தினால் சூழப்பட்டிருக்கின்றது என்று கூறுவர். அவற்றை நாம் நம் தலைவிதி என்று கூறிக்கொள்கிறோம். இன்னும் பலவற்றை அவ்வாறு நாம் கூறுவதில்லை. ஏனெனில், நாம்தான் அவற்றிற்கு எல்லாம் காரணம் என்று நாமாக சித்தரித்துக்கொள்கின்றோம். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தால் அதுவும் ஏதோவொரு நியதிப்படிதான் அல்லது விதிப்படிதான் நடந்தேறுகின்றன என்பது நமக்குப் புரியும். ஆனாலும், நமது சொ(ம)ந்தப் புத்தி இதனை இரண்டு கூறுகளாக பிரித்து வைத்துக்கொண்டு நம்மை சூதாடிவிடுறது. இதோ பாருங்கள், நம் செயலால் வந்த இடர்பாட்டால் நமக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதனை 'அது எமது தலைவிதி' என்று கூறி முடித்துவிடுகின்றோம். சிலவேளை, 'நடந்தது நடந்தது விட்டுவிடுவொம்' என்று எம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றோம். ஆனால் வேறு ஒரு காரணியாலோ அல்லது வேறு நபரால் எமக்கு ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டால் அதனை நாம் எமது தலைவிதி நடந்தது நடந்துவிட்டது என்று விட்டு விடுவது கிடையாது. புரிகிறதா?

இதுதான் வாழ்வில் அதிகப்படியாக நிகழ்கின்ற குழப்பம். எமது சூழலில் இடம்பெறுகின்ற செயல்கள் யாவற்றையும் யாரோ மனிதன் கூறுபோட்டு வைத்ததன் விளைவுதான் இன்னும் எம்மை அந்த வலைக்குள் வாட்டி வதைக்கின்றது. நல்லது நடந்தால் நாம்தான் அது என்றும், கெட்டது நடந்துவிட்டால் அது நமக்குப் புறப்பாக நடந்தது என்றும் கூறிக்கொள்வதுதான் மனிதன் பண்டுதொட்டு வாழ்ந்து வரும் நடைமுறை. பொதுவாக இந்த உலகில் நிகழ்கின்ற செயல்கள் யாவும் தானகவோ நடப்பது கிடையாது. மனிதனுக்கும் அவனுடைய சூழலுக்கும் ஒத்தாற்போல் நிகழ்கின்ற கருமங்கள் யாவும் அவனுடைய தொடர்பு ஏதும் இன்றி அணுவளவும் நிகழாது. ஏதோவொரு வகையில் அவனுக்கும் அந்த செயலில் தொர்பு இருந்துதான் ஆகும். ஆனாலும், தமக்கு நிகழும் இன்னோரன்ன சம்பவங்களில் இயற்கையை மறக்க நினைத்த மனிதனுக்கு நனது சகோதர மனிதனை மறக்க முடிவதில்லை. ஏனோ தெரியவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக 'அது எமது விதி'  என்று விட்டுவிடுகின்ற எம்மால் மற்றய சகோதர மனிதனால் இடம்பெறுகின்ற செயல்களின் பாரதூரத்தை மன்னித்துவிட முடிவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எதையும் நல்லது என்றும், கெட்டது என்றும் பிரித்துவைத்திருக்கின்றமைதான்.

ஆமாம், அது என்ன நல்லது என்றால்? கெட்டது என்றால் என்ன?

பொதுவாக இந்த உலகத்தில் உள்ளன எல்லாம் நல்லதுக்குத்தான் என்று கூறுவதனை நான் பலமுறை கேட்டிருக்கின்றேன். அப்படி என்றால் அது ஏன் எமக்கு சிலநேரம் நல்லவை அல்லாமல் திகழ்கிறது. அப்படியென்றால் கெட்டது என்றால் என்ன? யார் இதனை கண்டுபிடித்தது? கெட்டது என்று உலகில் எதுவும் கிடையாது. உண்மையிலேயே இந்த உலகில் நாம் அனுபவிக்கின்ற யாவும் நல்லவைதான். அது எதுவாக இருப்பினும் அது நல்லதுதான். நல்லது எதுவும் கெட்டதாக முடியாது. கெட்டது  இருப்பின் அது நல்லதாக ஆகாது. எனவே எல்லாம் நல்லதுதான். அப்படியென்றால் கெட்டது எங்கிருந்து வந்தது? அது வேறொன்றும் கிடையாது, மனிதனால் சமைத்தெடுக்கப்பட்ட வெறும் மாயைதான் இது. ஒரு வேளை, நல்லவர்கள் யாவரும் சேர்ந்து தமக்கு கீழாக சிலரை அடிமைப்படுத்த எடுத்த ஒரு முயற்சியாக கூட இது இருக்கலாம். அல்லது நல்லவர்கள் தமக்கு கீழான ஒரு இனம் இருக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக கூட இதன் உருவாக்கம் இடம்பெற்றிருக்கலாம்.  மறுவாறாக, நல்லவர்கள் தம்மை தாமே உயர்த்திக்கொள்ள தேவையாக இப்படி ஒரு ஏற்பாட்டை முடுக்கி விட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், நல்லது – கெட்டது என்ற இரு சொற்களையும் துணைச் சொற்கள் என்றுதான் இலக்கணங்கள் விபரிக்கின்றன.  ஒன்றை விளக்க மற்றயதின் துணை அவசியப்படுகிறது. 'நல்லது' என்பதனை விளங்கிக் கொள்வதானால் நீங்கள்  கெட்டது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லது கெட்டது எது? என்பதனை விளங்கிக் கொள்ள நல்லது எது? என்பதனை விளங்க வேண்டும் என பொதுவாக கூறப்படுகிறது. என்றாலும், நீங்கள் கெட்டது எது? என்பதனை மூல விளக்கத்துடன் புரிந்துகொண்டால் நல்லது எது? என்பதனை புரிந்துகொள்ள இயலும். ஆரம்பத்தில், இந்த உலகில் உள்ள யாவும் நலவுக்குத்தான் என்றால் அங்கு கெட்டது எதுவும் கிடையாது. என்றாலும், காலம்தான் அதனை தீர்மானித்து விடுகின்றது. மனித வாழ்வில் காலத்திற்கு இருக்கும் பங்கின் விசாலம் இந்த நல்லது கெட்டதுக்குள்ளும் காணப்படுகிறது. நல்லது எது? என்பதனை காலம்தான் தீர்மானிக்கிறது. இதனால் காலம்தான் சிலவற்றை தேர்ந்தெடுத்து கெட்டது இதுவென மனிதனை வரையறுக்க கட்டாயப்படுத்தி விடுகிறது. உதாரணமாக, ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகிறாள். மற்றொரு தாய் தனது ஒன்பது வயது பிள்ளைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகின்றாள். இங்கு எது நல்ல விடயம்? எது கெட்ட அல்லது கூடாத செயல்? எனவே, மனிதன் தன் வாழ்வில் சிலவற்றுக்கு தாமாகவே வரையறைகளையும், மட்டுப்பாடுகளையும் காலத்தின் சூழ்ச்சியால் இட்டுக்கொண்டதன் விளைவாகத்தான் கெட்டது எது? என்று அவன் சிநந்திக்க முடிந்தது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கு மறு காரணிகளும் ஊக்கப்படுத்தின. அதாவது, மனிதனுக்கு மாத்திரம்தான் இந்த உலக வாழ்வில் காலத்துடன் கூடவே ஒத்து பிரயாணிக்க வேண்டிய தேவையும், கட்டயாமும் இருக்கின்றது. அதுவும் மனிதன் தனக்காக வலிந்து ஏற்படுத்திக்கொண்ட சவால்தான்.

இன்னும் விளக்க வேண்டுமானால்... மனிதன் தனக்கென்று வரையறைகளை இட்டுக்கொண்டு இப்படி இருந்தால்தான் நல்லம், இப்படி நடந்தால்தான் நல்லது என்று பொதுவிதிகளை ஆக்கிக் கொண்டான். அவ்விதிகள் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையாகத்தான் உருவாகியது. அப்படி உருவான விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகள் ஏனையவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மனித சமுகத்தில் தோன்றியிருக்க வேண்டும். அல்லாவிடில், கூட்டமாக வாழ்வதும், குதூகலிப்பதும் அந்த சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். ஏனெனில், விதிகள் விருப்பு வெறுப்பு அடிப்படையானது என்பதனால் நல்லது எது? கேட்டது எது? என்பதுவும் நபருக்கு நபர் வேறுபட்டிருக்கும். இதனால் அச்சமுகத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுவதற்கு அவ்விதிகளே காரணமாயிருக்கும். இதனால், கூடியிருந்த மனித கூட்டம் யாரோ தனிப்பட்ட பலம்பொருந்திய ஒருவருடைய சிந்தனைக்கும், விருப்பு வெறுப்புக்கும் விரும்பியோ விரும்பாமலோ செவிசாய்த்ததன் விளைவாக நல்லது எது? கெட்டது எது? என்பது வரையறுக்கப்பட்டிருக்கும்.

எனவே, இத்தகைய தனிப்பட்ட ஒருவருடைய விருப்பு வெறுப்பிற்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கெட்டவர்களாக கருதப்படுவர். ஏனெனில் விதி, அங்கு எதிர்ப்பவர்களினால் மீறப்பட்டதாக சமுதாயம் கூறியிருக்கும். அதாவது, நாம் இவர் ஊரோடு ஒத்து வாழத்தெரியாதவர் என்று கூறுகின்றோமே அவர்களைத்தான் கூறுகின்றேன். ஆயிரத்தில் ஒருவன் என்று கூறுவதும் இவர்களைத்தான். இவர்களுக்காகவேதான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கும். காரணம், அவர்கள்தான் உலகின் யதார்த்த நிலையினை புரிந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பதன் காரணம் காலத்திற்குள் கட்டுப்பட்ட விருப்பு வெறுப்பின் வதிமுறைக்குள் தமது செயல்பாடுகளை மனிதன் தாமாகவே அடிமைப்படுத்திக் கொள்வது கூடாது என்தபனால்தான். மேலும் விளக்கப்போனால், இவ்விதிமுறைகள் எல்லாம் மனிதனின் விருப்பு வெறுப்பின் அடியாக பிறந்தது என்பதனால் அது பொதுவானதாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அவர்கள் கூறுவர். ஏனெனில் மனித விருப்பு வெறுப்பு என்பது இடத்துக்கிடம், ஆளுக்கு ஆள் வேறுபட்டது. எனவே, பின்பற்றப்படுகின்ற விதிகளும் பொதுவிதியாக கொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆளுக்கு ஆள் வேறுபட்டது. இதனால் நல்லது எது என்பதனை தீர்மானிப்பது நாமாக இருக்க வேண்டுமே தவிர, நமக்கு அதனை வேறுநபர் விபரிக்கக் கூடாது. அவ்வாறு விபரிப்பதென்பது அவருடைய விருப்பு வெறுப்புக்களை நம்மீது திணிப்பதாகும். மறுவாறாக, அவ்வாறு வேறு ஒரு நபரினால் விபரிக்கப்படுகின்ற விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வது நமக்கு காணப்படுகின்ற மனிதனின் அடிப்படை பண்பான விருப்பு வெறுப்புக்களை இல்லை என்று மறுப்பதாக, அல்லாது போனால் நாம் மனிதன் என்பதன் யதார்த்த நிலையில் இருந்தும் விடுபட்ட பிராணி என ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும். இவர்கள் நல்லன பற்றி பெருமைப்படுகின்றார்களோ இல்லையோ கெட்டது எது? என்பது குறித்து கவலைப்படுவதோ கிடையாது.  

ஏனெனில், இவர்களுடைய விதிமுறைகள் யாவும் காலத்திற்குள் கட்டுப்பட்டிருப்பது கிடையாது. அவர்கள் மனிதன் தனது நலத்திற்காக உருவாக்கிய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகளை தாண்டிய சிந்தனையில் கிடப்பதனால், இவர்கள் பேசுகின்ற விடயங்களுக்கும் அச்சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுவான கருத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி தோன்றும். சமுதாயம் அவர்களை கெட்டவன் என்றுதான் கூறும். காரணம், அவர்களின் விதிமுறை விசித்திரமாக தோன்றும். ஆனால் அவர்களோ தம்மை கெட்டவன் என்று கூறுவதனை பொருட்படுத்தமாட்டார்கள். அதற்கும் நியாயம் உண்டு. அதாவது, இவர்கள் கெட்டவன் என்று கூறுவது அ(கூறுப)வர்களின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் உருவான விதியினால்தானே. இதனால்தான அவற்றை இத்தகையவர்கள் கருத்திலெடுப்பது கிடையாது. இதனால் நல்வர்களுடைய செயல்களும் சரி, அவர்களுடைய சிந்தனைகளும் சரி காலத்துள் கட்டுண்டு கிடப்பது கிடையாது. எனவேதான் நல்லவனுக்கு காலமில்லை.

நான் மனிதன் மட்டும்தான்
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

நான் மிதமிழந்து,
சினம் வெந்து குருடாகி,
இடர் சமைக்கிறேன்.
காரணம், நான் மனிதன் மட்டும்.
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அகங்காரம் எனக்குள் ஆட்கொண்டிருக்கிறது,
கவனம், உனது நட்பைப் போல,
நான் விளங்கியது அவ்வளவில்லை.
நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

உதவாத ஆடம்பரங்கள்,
சல்லடை நிறைந்த சல்லாபங்கள்,
கேள்விகள் நிறைந்த காரியங்கள்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அழகு அருவருப்பானது,
இருப்பதெல்லாம்
காமத்திற்கு குழிதோண்டுகிறது,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அதிகார ஆசை,
பசிக்கு புசிப்பனம்,
அறிவில் அசட்டுத்தனம்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

சபலம் ஆட்கொண்ட,
தீதால் வெறியேற்றப்பட்ட,
உள்ளுணர்வின் படபடப்பும்,
திணறடிப்பும்தான் நான்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

ஆனால்...,
நானும் தெரிவில் ஒன்று,
அன்பு,
கருணை என்பவற்றின் நியாயாம்,
இந்த அடிமை.

எனது அகங்காரத்தை அடித்து நொறுக்க முடியும்,
நல்லதுக்கு சண்டை இட முடியும்,
மண்டியிட்டு மன்றாடவும் இயலும்,
நேசமிக்க பெருமை,
இந்த அடிமைக்கு.

மன்றாடவே பிறந்தவன் இவன்,
இந்த அடிமை,
ஆதரவளிக்கும்,
மண்டியிடும்.

நான் பாவங்கள் நிறைந்த
மனிதனாக இருக்கலாம்,
ஆனால்,
நான் மட்டும்தான் பெருமைக்குரியவன்,
அது என்னை பலவானாக்கும்.
நான் ஒரு அடிமை.


கடவுள் இறந்துவிட்டார்

நானும் எனது நண்பனும் வழமைபோன்று காலிமுகத்திடலில் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களாவது இந்தக் கொழும்பில் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், சந்றேனும் அமைதியினை உருசிப்பதென்றால் இப்படியாக காலிமுகத்திடலை நோக்கி புறப்பட்டு சென்றுவிடுவோம். சுமார் இரவு 9 மணியிருக்கும், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவ்விடத்தில் வெளிப்பட்ட ஒரு சிறுவன் தன்னிடம் வடையும், கடலையும் இருப்பதாகவும் எங்களை வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டான். அப்படியே நான் அவனை உற்று நோக்கினேன். இதனை அவதானித்த எனது நண்பனும் தலையை குனிந்து கொண்டு சகிக்க முடியாத உணர்வினை தன்னுள்ளே முழுங்க முயற்சிப்பது புரிந்தது. நானும் அந்த சிறுவனை அப்படியோ உற்று நோக்கி விட்டு உனது பெயர் என்ன என்று விசாரித்தேன். அதன் பின்னர் அவனை மேலும் விசாரிக்க தொடங்கினோம். அப்பொழுது அவனில் ஏதோ மாற்றம் உருப்படுவதனை நாங்கள் இருவரம் அவதானித்துக்கொண்டோம். 

அந்த தம்பியின் ஊரைப் பற்றி வினாவிய பொழுது அவன் கூறிய ஊர் என்னையும் எனது நண்பனையும் ஒரு வினாடி திடுக்கிடச் செய்தது. காரணம் அது எனது நண்பனுடைய ஊர்தான். அப்படியே சுதாகரித்துக் கொண்ட நாங்கள் அவனை அப்படியென்றால் அந்த ஊரில் எவ்விடத்தில் உங்களுடைய வீடு உள்ளது என்று கேட்டேன். அப்போது, அவன் வயதில் சுமார் 11 (அவன் ஆறாம் ஆண்டு படிக்கின்றானாம் என்றான்) வயதுதான் இருக்கும் எங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது புரிந்தது. நானும், அதுவரையில் அவனை விசாரித்த அனைத்தையும் விட்டுவிட்டு "உன்னுடைய வாப்பா என்ன வேலை செய்கின்றார்" எனக் கேட்டேன். அவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிறுநீரகப் பிரிவில் சத்திர சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறினான். அத்தோடு உன்னுடைய தாய் எங்கே என்று வினாவிய போது அவரும் காலி முகத்திடலின் மறுபக்கத்தில் வடையும் கடலையும் விற்றுக் கொண்டிருப்பதாக கூறினான். நீங்கள் கொழும்பில் எங்கு இருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு சிலேவ் ஜலண்டில் வசித்து வருவதாக கூறினான். அப்போது எனது நண்பன் 'அப்படியென்றால் நீ முன்பு கூறியவையெலல்லாம் பொய்தானே' என்று கேட்க அவன் தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான். சரி என்று கூறிவிட்டு என்ன செய்வது அவனிடம் இருந்த கடலைப் பையில் இரண்டையும் வடையில் சிறிதளவும் வாங்கிவிட்டு அவனை விட்டு விட்டோம்.

இப்படியோ சற்று நேரம் தாமதித்த நேரத்தில், நாங்கள் வாங்கியவற்றை உண்டு முடித்திருக்கவில்லை. அதேவேளை மற்றொரு பெண் அவளுடைய கையை ஏந்திய வண்ணம் எங்களை அணுகி வந்தாள். எனது நண்பன் வசாரணையினை ஆரம்பித்தான்.  சுமார் 15 நிமிடங்கள் வரை நாங்கள் இருவரும் சேர்ந்து அவளை நோக்கி வினாக்களை தொடுத்தோம். அவள் மட்டக் குளியில் வசித்து வருகின்றாள். அவளுடைய பிறந்த இடம் பதுளை. பிறப்பில் ஒரு தமிழ் பெண். அவளுடைய கணவன் அவளை இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்துதான் கொழும்பிற்கு கூட்டி வந்திருக்கிறான். தற்போது அவளை விவாகரத்து செய்துவிட்டான். ஆனால் அவளை எனது நண்பன் விசாரித்த போது அவளுக்கு இஸ்லாத்தினைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்கு கலிமா கூட தெரிந்திருக்கவில்லை.  காலிமுகத்திடலில் அவளுக்கு ஒருநாளைக்கு சாராசரியாக 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையில் வசூல் கிடைக்கின்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2000 சூபா தொடக்கம் 2500 ருபா வரையில் , சில வேளை 3000 சூபா வரையில் கிடைப்பதாக கூறினாள். பிள்ளைகள் இரண்டு இருக்கின்றது. கணவனால் எந்த உதவியும் இல்லாததன் காரணமாக இந்நிலமையாம். இவளுடைய நிலையினை கேட்ட பின்பு நீங்கள் கூறலாம் இவள் பொய் கூறுகின்றாள் என்று. ஆனால் அதற்கும் அவள் ஒரு சான்றினை என்முன் வைத்தாள். நீங்களும் அதனை இங்கே காணலாம். இரவு வெளிச்சத்தில் மிகத் தெளிவாக அதனை படம் எடுக்க முடியவில்லை.











 





இம்மாதம் 15ம் திகதி, விடுமுறை நாள். தெஹிவளையில் வேலை ஒன்றினை முடித்துவிட்டு வழி திரும்புகையில் வெள்ளவத்தை காகில்ஸ் பூட்ஸ் சிட்டியின் அருகில் சிறிது நேரம் எனது நண்பனுக்காக காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது. நின்றதுதான் தாமதம், ஒருவர் என்னை அணுகி அவரிடம் உள்ள பொருளை காட்டி என்னை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அவை வேறு ஒன்றுமில்லை, வீடுகளில் பீங்கான் கோப்பைகள் கழுவுகின்ற பஞ்சுத் துண்டங்களும், அவற்றை உராய்சி கழுவ உதவுகின்ற கம்பி இழைகளினால் தயாரிக்கப்பட்ட பொத்தியும்தான் அவரிடம் காணப்பட்டது. நான் அவற்றை வாங்கி என்ன செய்வது என்ற நோக்கில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவன் மீண்டும் இருதடவை 'வாங்கிக்கோங்க' என்று கூறினான். நானும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சடுதியாக அவன் 'நான் முஸ்லிம்தான்'; என்று கூறினான். அப்போது அதிர்ந்து போன நானும், 'இல்லை வேண்டாம்' என்று கூறி சற்று கோபமாக பார்த்தேன், சென்றுவிட்டான்.  நான் அவனிடம் பொருட்களை வேண்டாம் என்று கூறியபோது அவன் ஏன் தன்னை முஸ்லிம்தான் என்று கூறி அதனை எனக்கு தெரியப்படுத்தினான் என்று இதுவரை எனக்கு சரியாக புரியவில்லை. சிலவேளை நான் அவனிடம் பொருட்களை வாங்கி அவனுக்கு உதவ முன்வராததன் விளைவாக நான் முஸ்லிம் என்பதனை அவண் அடையாளம் கண்டுடிருப்பானோ!

அப்படியே அவ்விடத்தில், 5-10 நிமிடங்கள் கடந்திருக்கும். 17 -21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தனது, பால்குடி மறவாத குழந்தையுடன் என் முன் வந்து வாசைன குச்சிகள் அடங்கிய மூன்று பெட்டிகளை காட்டி 'சேர் மூன்றுக்கும் 50 ரூபா சேர்' என்ற போது என்னால் என் மனத்தினை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை நேரெதிரில் எதிர்கொள் எனக்கு இயலாமல் போனது. பின்பு அவ்விடத்தில் எனது நண்பனை சந்தித்த பின்பு அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவள் கொலன்னாவை என்று பதிலளித்தாள். கணவன் கூலி வேலை செய்கிறானாம். ஆனால் அந்த சகோதரி அவளுடைய  பெயரை மட்டும் என்னிடத்தில் பொய்யாக கூறினாள் என்பது எனக்குத் தெரியும்.  அவளும் முஸ்லிம்தான் ஆனால் அவள் தன்னை ஒரு தமிழ் பெண் போன்று மறைத்துக் கொண்டாள். சில வேளை அவள் என்னை ஒரு இழிந்த சமூகத்தின் வெட்கம் கெட்ட ஒரு அங்கத்தவனாக நேக்கியிருக்கலாம். அல்லது அவளுக்கே அவள் முஸ்லிம் எனக் கூறுவது அவமானமாக இருந்திருக்கும்.

இன்று மருதானை வழியாக சென்று கொணடிருந்த நான் பள்ளிவாயலின் அருகில் ஒரு சகோதரியினை அவதானித்தேன். சுமார் 16-18 வரை வயது மதிக்கத்தக்கவள். இரு கைக்குழந்தைகளுடன் பள்ளிவாயலின் முன்றலில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை மடியில் போட்டுக் கிடப்பதனை காண்கையில் மீண்டும் நான் எதனைக் கூறுவது....???

சிலவேளை, தொழுகைக்கு போவது கூட எனக்கு கொரூரமாக இருக்கிறது. பிச்சை எடுக்கும் என் தாய், பிச்சை எடுக்கும் என் சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் முகங்களை எதிர்கொண்டுதானே பள்ளியை விட்டு வெளியில் வரவேண்டும் என்ற ஏக்கமும், வெட்கமும், கூடவே அவமானமும்தான்......... ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். மறுமையிலும்தான் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் ????????? 

"கடவுள் இறந்துவிட்டர். அவரை நாம்தான் கொண்றோம்" என  Nietzsche கூறியது உண்மைதான்.