Showing posts with label வாழ்தல். Show all posts
Showing posts with label வாழ்தல். Show all posts

அமைதி - சந்தோசம்- வாழ்க்கை

அமைதி, சந்தோசம் என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் வாழ்கையுடன் எப்போதும் குழப்பிக் கொள்கின்றோம்? இவைதான் இன்று எனக்குள் எழுகின்றா வினா. இவ்வமைதி சந்தோசம் என்கின்ற இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தனவா? அல்லது இரண்டும் வேறு வேறானவையா என்கின்ற கேள்விக்கு அவ்வளவு சுலபமாக உங்களால் விடையளிக்க முடியமானால் நீங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையிரண்டும் நீங்கள் உங்களுடைய வாழ்நாளை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன. அதாவது, இதனை மறுவாறாக கூறுவதானால் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வாறு வாழப்பழகிக் கொண்டீர்கள் அல்லது வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கின்றது.

நீங்கள் உங்கள் நன்பர்களுடன் அளவளாவுவதாக இருப்பினும் சரி, உங்கள் தாய் தந்தையர் சொற்படி நடப்பதாக இருந்தாலும் சரி, உங்களுக்குத் தேவையான உடு புடவைகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, ஏன் உங்களின் காலில் ஒரு முள் குத்திவிட்டாலும் சரி. இவை எதுவாக இருப்பினும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன.

பாருங்கள், எமக்கு தெரிந்த எத்தனையோ செல்வந்தர்கள் பணமிருந்தும் அதனை செலவு செய்ய முடியாமல், திருப்பதிகரமாக அல்லது விரும்பிய உணவுகளை கூட உட்கொள்ள முடியாமல் திக்கு முக்காடுகின்றனர் அல்லவா? வருடமொன்றிற்கு கோடி ரூபாய் பணம் சம்பாதித்தும் நிம்மதியை தேடி அலைகின்ற எத்தனையோ பேர் வாழ்கின்றார்கள் அல்லவா? இரவு பகலாக குடும்பத்திற்காக உழைத்துக் கஷ்டப்பட்டவர்கள் அத்தனை சொத்துக்களையும் ஒரே தடவையில் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி நடுத் தெருவில் நின்ற கதைகளும் எமக்கு தெரியும்தானே!. அதைவிடுங்கள், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்த பெற்றார்களை கடைசிக்காலத்தில் கைவிட்ட எத்தனை பிள்ளைகள் இவ்வுலகத்தில் வாழ்கின்றார்கள். இப்படித்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால் இந்த அமைதி சந்தோசம் என்பன வாழ்க்கையில் எப்போது? யாருக்கு கிடைக்கும்? 

நாளென்றுக்கு நூறு ரூபாய் உழைப்பவனுக்கு பத்து ரூபாய் கடன் என்றால் கோடி ரூபாய் உழைப்பவனுக்கு பத்து இலட்சம் ரூபாய் கடன் இருந்துதான் ஆகும். ஆனால் எமக்கு பத்து ரூபாய் பெரிதாக படுகின்ற அளவுக்கு அவனுக்கு பத்து இலட்சம் கடனாக இருப்பது பெரிதாக படுவது கிடையாது. அதற்கு எமது மூளையும் வேலை செய்வதும் கிடையாது. இதற்கு காரணம் எம்மில் எமக்கு நேசம் இருந்தால்தானே தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை வரும். தன்னம்பிக்கையும் சுயதிருப்பதியும் இல்லாவிட்டால் எம்மை நாமே எவ்வாறு நேசிக்க முடியும். என்னை நானே நேசம் செய்து கொண்டால் மற்றவர்கள் கூறுபவைகளுக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டிய தேவை வருமா? 

வீதியோரத்தில் பெட்டிக்கடை வைத்து சீவியம் நடாத்துகின்ற ஒருவனின் நிலமையினை சற்று கற்பனை செய்து பாhத்திருக்கின்றீர்களா? அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்கள் அனைத்தையும், பொருட்களை ஏன்? அவனுடைய கடையினையே எமது காசுப்பையினுள் இருக்கின்ற பணத்தினை வைத்து வாங்கிட இயலுமா இல்லையா? பெரிதாகப் போனால் அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்களுடைய மொத்த மதிப்பு இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் ரூபாவினை தாண்டாது. இதற்கிடையில் அவனுக்கு தனியே வீடு வாசல் கிடையாது. ஆனால் குடும்பம் குட்டி, கிடா எல்லாம் இருக்கின்றது. என்றாலும், அவன் அந்த வீதியில் அனுபவிக்கின்ற அமைதியினையும் சந்தோசத்தினையும் நீங்கள் உங்களுடைய வீட்டில் அனுபவிக்க முடிகின்றதா? 

எனக்குத் தெரிய கொழும்பில் லிப்டன் சதுக்கத்தில் சிலான் வங்கிக்கருகில் இருகுடும்பங்கள் சுமார் இரண்டு வருடங்களாக சீவியம் நடாத்தியது. அவ்விரு குடும்பங்களுக்கும் இருந்த வாழ்க்கை என்பது சற்று வித்தியாசமானதுதான். என்றாலும், அங்கு அமைதியிருந்ததே என்று நினைக்கும் போதுதான் எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவர்கள் தமது காலைக்கடன்களை முடித்துக்கொள்வது, றஹுமானியா பள்ளிவாயலிலும், அருகிலிருக்கும் ஆலயத்திலும்தான். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் குளிக்குமிடமும் சற்று வித்தியாசமானதும், அது மிக அலாதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான இடம். சில வேளை நானும் அவ்விடத்தில் குளித்தால் எவ்வளவு அலாதியாக இருக்கும் என்று பல தடைவ சிந்தித்திருக்கின்றேன்.  லிப்டன் சதுக்கத்தின் சுற்றுவட்டத்தில் மலச் செடிகளுக்கு நீர் விசிறுவதற்காக ஒரு நீர் வினியோக குளாயினை கொழும்பு மாநகர சபை அந்த சற்றுவட்டத்தினுள்ளேயே ஏற்படுத்தி வைத்துள்ளது. அந்த இடத்தில்தான் அவர்கள் மாலை ஆறு அல்லது ஏழு மணியளவில் குளிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் இரவுப் பொழுதானதும் அவ்விடத்தில் குளிப்பார்கள். இதுவும் சந்தோசமான வாழ்ககைதான். ஆனால் அது வித்தியாசமான வாழ்க்கை எமக்கு. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை வேறுபட்டதாக இருப்பதனால், நாம் வாழ்க்கையினை வேறுபட்டதாக சித்தரித்து வைத்திருப்பதனால் அவர்களை குறைகாணத் துடிக்கிறது எமது மனம். அத்தோடு நின்றுவிடாமல் அவர்களை இழிவாகவும் பச்சை குத்திவிடுகின்றது எமது புறக்கண். இதனையெல்லாம் நான் அவதானித்திருக்கின்றேனா? என்றெல்லாம் நீங்கள் சிந்திப்பது தவறு. ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவம்தான். நான் அனுபவங்களைத் தேடி அலைகின்றவன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கின்றது பாருங்கள். எனக்குத் தெரிந்த இன்னும் இருவர் இருக்கின்றனர். இவர்களும் வீதியில்தான் வசித்து வருகின்றனர். ஆனால் அதில் ஒருவர் பெண்மணி, உங்களுக்குத் தெரியுமா? அவர் வசிக்கின்ற இடமே மிகவும்....மிக மிகவும் வேறுபட்டது. அவர் தனக்காக தயார் படுத்தியிருக்கும் குடித்தனம் மிகவும் பழமையானது. அவருடைய புராதன இருப்பு அவருடைய குடித்தனத்தில் என்றும் அழியாதிருக்கும். இதனை நீங்கள் காணவேண்டுமானால் ஒரு நாள் தெகிவளை ஹில் வீதியால் சென்றுதான் பாருங்களேன். அவருக்கும் இவ்வுலகில் குடும்பங்கள் இருந்திருக்கத்தானே வேண்டும். இந்த வயதான பாட்டிம்மாவுக்கு என்ன நடந்திருக்கும், ஏன் இந்த இடத்தில் அவர் வசிக்கின்றார்; என்பது எனக்கு தெரியது. ஆனால் அவருக்கும் இறைவன் நாளாந்தம் உணவளித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பதனை நினைக்iகையில் எனக்க பெருமையாக இருக்கின்றது. மற்றயவர் கொலன்னவையில் இருக்கின்றார். விடயம் என்னவென்றால், இவ்விருவரும் நான் அந்த வீதியினால் செல்கின்ற போதெல்லாம்  மிகவம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதனை நான் அவதானித்திருக்கின்றேன். அவ்வேளைகளில், எமக்கு சிறிய சத்தமொன்று கேட்டாலே நித்திரையில் இருந்து அரண்டுவிடுகின்றோமே இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சுகமாக நித்திரை கிடைக்கின்றது என்று, அதுவும் இத்தனை வாகனங்களின் இரைச்சல்களுக்க மத்தியில் என்று என்னுடைய மனம் என்னை எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

இதேபோன்றுதான், கடந்த ஞாயிற்றக் கிழமை ராஜகிரியவிலிருந்து பொரல்லை கனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சிவப்பு சமிக்கையில் நிற்கவேண்டியதாயிற்று. அப்போது நான் என்னுடைய வாகனத்தினை ஒரு முச்சக்கரவண்டிக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு தயாராக இருந்தேன். அவ்வீதிப் பாதை மூன்று வழிப்பாதையாக இருந்ததனால் ஏனைய வழிகளிலும் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது பச்சை விளக்கு ஒளிர்ந்ததனால், எல்லா வாகனங்களும் மீண்டும் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தன. ஆனால், நான் தங்கி நின்ற வழிப்பாதையில் எனது வாகனத்திற்கு முன்னால் நின்ற முச்சக்கர வண்டி சிறிதேனும் நகர முடியாமல் சத்தத்தினை செய்து கொண்டு நின்று கொண்டிருந்தது. சற்று தாமத்தித்து பார்த்த நான் அந்த முச்சக்கர வண்டியினை தாண்டி செல்ல முற்பட்டு வாகனத்தினை மற்றய வழியினால் திருப்பிக்கொண்டு புறப்பட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த வழியப்பாதையில் முச்சக்கர வண்டிக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரர் அவருடைய வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்து நின்றவர், அதேகனத்தில் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு ஒலி எழுப்பியும் அவரால் அரள முடியவில்லை என்றால் பாருங்கள் எவ்வளவு அமைதியான ஆழ்ந்த உறக்கம் அவருக்கு இறைவனால் கிடைத்துள்ளது என்று.

இதனைத்தான் அமைதி சந்தோசம் வாழ்க்கை என்று குறிப்பிட்டேன். எங்கு உன்னதமான வாழ்க்கை இருக்கின்றதோ அங்குதான் அமைதி பிறக்கும், அமைதி பிறந்துவிட்டாலே ஒரு சந்தோசம்தான்! ஆனால் இவை அவரவர் வாழ்க்கையில் மாற்றங்களினால் சிதைந்துவிடுகின்றன. இத்தனை சிதைவுகளுக்கும் காரண காரியம் நாம் வாழ்க்கையினை எவ்வாறு சித்தரித்துக் கொள்கின்றோம் என்பதுதானே தவிர வேறொன்றுமில்லை.

மாசற்ற மதிப்பு
உனக்கு முன்னால் நீ காண்பவைதான் என்ன?
இது எண்ணங்களின் உருத்தோற்றம்,
சிந்தனைகளில் எழுந்த ஆறாவடு,
செல்வத்திற்கும் இறைவனுக்குமிடையில்
வெறுமைகளின் கருவறை.

செல்வம் எங்கு ஈடேற்றமாகிறது
இறைவன் என்பது நம்பிக்கை
ஆனால் செல்வம் பேறாயிருக்க,
வேறுபட்ட கூட்டமிருக்கிறது.
நீ வேண்டிய எண்ணங்களுக்கு
இறைவனும் சொந்தக்காரன்.
இன்னும் - நீ 
ஒன்றுக்கும் பெறுமதியற்ற
இவர்களின் கண்களில் இருந்து பிரிந்து செல்.

இதுதான் எண்ணம்,
நிராசையின் ஊற்று,
நற்செய்தியாய்க் கிடைக்கப்பெற்ற
சோதனைகளின் சஞ்சல வெளிப்பாடு.
எல்லாவற்றையும் விட உன்னை மாசற வைத்திரு.

ஆனால் அதுதான் நீ காண்பது,
அதுதான் உருத்தோற்றம்,
இறைவன் மாற்றமேதுமில்லை என்றால்
அதுதான் உனது விதி.

ஆதலால் பேறாயிருக்க கற்றுக் கொள்.
உன்னுடைய தங்கம் இறைவனுடையதல்ல என்கும் வரை. 
தரம் எதுவாயிருப்பினும் பேறாயிரு,

அது உன்னுடைய விருப்பம்.
நிம்மதியினை சுவீகாரம் செய்.

வாழப் பிடிக்கவில்லை சாகப் பிடித்திருக்கிறது.

இப்படித்தான் இரவு முழுக்க என்னுடைய எண்ணச் சிதறல்கள் இருந்தன. எல்லாம் ஒரேயொரு காரணம்தான் வாழப் பிடிக்கவில்லை பாருங்கள். காலையில் எழுந்ததும் இந்த சிந்தனை என்னை மீண்டும் ஆட்பரித்துக் கொண்டது. ஏன் என்று எனக்குப் புரிகின்றது. தற்போது இதனை எழுத ஆரம்பித்த கனப் பொழுதில் ஒரு நுளம்பு என்னை பதம் பாhத்துவிட்டு திரும்ப முனைந்தது. நான் என்ன சும்மா விட்டுவிடுவேனா? என்னை பதம் பார்த்த அந்த நுளம்பை அதே கனத்தில் அடித்து சாகடித்து விட்டேன். அதற்கும் சாகப் பிடித்திருக்கின்றது. தற்போது இதனை எழுதிக் கொண்டிருப்பது இரத்தம் தோய்ந்த கைகளுடனும், கொலை செய்த பாவியாகவும்தான் என்பதனை நீங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். எத்தனை கல் நெஞ்சாக இருப்பினும் அதனுள்; இருக்கும் ஈரம் சிலவேளைகளில் வெளிப்படத்தான் செய்கிறது.

காலையில் வெளியே புறப்பட்டு வீதியில் சென்று கொண்டிருக்கும் வேளை திடீரென ஒரு துவிச்சக்கர வண்டியில் ஒருவன் என்னை கடந்து மிகவும் வேகமாகச் சென்ற மாத்திரத்தில் ஒரு வேன் குறுக்கே வந்ததனால் சடுக்கென நிறுத்த முனைந்தான்;. பாவிப்பயல் மயிரிளையில் தப்பி விட்டான். அவனுக்கும் சாகப்பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறே வழியில் சென்று கொண்டிருக்கையில் பாரியளவில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்றை சற்று எனது கண்களையும் மனதையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது. அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும் வடிவமைப்பும் எனது உள்ளத்தனை சற்று பதம் பார்த்தது. அது உண்மையில் வர்ணப் புச்சுக்கான விளம்பரம். அந்த விளம்பரத்தில் ஒருவர் கதிரையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றார். அருகில் ஒரு வர்ணப் பூச்சு வாளி ஒன்று இருக்கின்றது. அத்தோடு அங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் 'கவலை வேண்டாம், இந்த மதில் சுத்தமாக்கப் பட்டிருக்கும்'. (டியுலக்ஸ் வர்ணப் பூச்சுக்காக பேஸ்லைன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகையில்தான் இவை காணப்படுகின்றன.)

வாழ்விலும் இப்படித்தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எமக்கு கிடைக்கின்ற கவலைகளும், இழி சொற்களும், அவமானமும், ஏமாற்றங்களும், பித்தலாட்டங்களும், மாத்து நொடிகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும்தான் அந்த வர்ணப் பூச்சு வாளியில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட நான்தான் அந்த ஆசனத்தில் சோகமாய் அமர்ந்து கொண்டிருந்தேன். இங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் எனக்குத்தான் அப்போது முழுமையாக பொருந்துகின்றது பாருங்கள். 

என் மீது வீண் பழிகளையும், இழி சொற்களையும் தீட்டுகின்ற இவர்களுக்கு மட்டும் என்ன நல்லதா நடக்கப் போகின்றது. இப்படி இவர்கள் செயற்படுவதனால் என்னுடைய பாவங்களும், என்னுடைய செயற்பாடுகளும் தானே அதனூடாக செழிப்படையப் போகின்றது, தெளிவடையப் போகின்றது, சுத்தம் செய்யப்படப் போகின்றது என்பதனை இவர்கள் உணர்ந்து கொண்டால் சரி. இதனை இவர்கள் உணராமல், என்னுடைய கற்பனைகளையும், கதாபாத்திரத்தினையும் மறந்து, அதன் மாற்றங்களில் இருக்கும் நிகழ்வுகளை பொருட்படுத்தாது  இவர்கள் என்மீது வீசியெறிகின்ற பழிகளுக்கு மத்தியில், குற்ற உணர்ச்சியுடன் என்னால் வாழ முடியாமல் நான் தவிக்கின்ற நொடிகளை இவர்கள் எப்போவாவது சிந்தித்திருக்கின்றார்களா? இல்லை. இவர்கள் இவ்வாறான ரணங்களை அனுபவித்தது கிடையாதா? வாழ்வின் சொல்லொணா துயரங்களை எத்தனை காலத்திற்கு பொறுமையோடு இப்படிக் கழிக்க முடியும் எம்மால். இதனால் எனக்கு வாழப்பிடிப்பது கிடையாது, ஆனால் சாகப் பிடிக்கின்றது. ஏன்றாலும், அங்கும் இந்த வர்ணப் பூச்சு முடிந்துவிடாது என்கின்ற ஐயமும் இருக்கின்றதே! அதுதான் இவர்கள் என்னுடைய சாவுக்கும் அர்த்தம் சொல்வார்கள், காரணம் கற்பிப்பார்கள் என்ற தெளிவு எனக்குள் சிக்குண்டு தவிர்க்கின்றது.

இப்படியொரு எழுத்து நான் எப்போவோ எழுதியது, இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது கேழுங்கள்....

எனது எண்ணச் சிறகுகள் 
அகல விரிக்கும் போது – வந்த
எறும்புகள் கடித்து,
இதயம் நின்றுபோனதே என்னுயிரே!

இது எனது ஹைக்கூ'வாக இருக்லாம். பல அர்த்தங்களை இவ்வசனங்கள் தாங்கி நிற்கலாம். ஆனால் தற்போது எனது நிலமை இறுதிக் கட்டமாக கூட இருக்கலாம்.

சிலர் நினைக்கின்றார்கள் இவ்வாறு வாழ்கையை விட்டு ஒதுங்க நினைப்பது கோழைத்தனம் என்று. ஆனால் அதன் அர்த்தம் நிச்சயமாக அதுவல்ல. வாழ்க்கையினை மற்றவர்களுக்கு விட்டுவிட்டு நாம் மெல்ல ஒதுங்கியிருக்க நினைப்பது வாழ்வில் எமக்கு ஏற்படுகின்ற பக்குவம் என்பதுதான் எனக்குப் புரிந்தது. இவ்வாறு பக்குவமாக ஒதுங்கியிருப்பது அவரவர் எதிர்பார்க்கும் பக்குவத்தினையும் அதன் வீச்சினையும் பொறுத்தது, வேறுபடலாம். அந்தப் பக்குவத்தின் மூலம் இந்த உலகத்தின் எல்லாவற்றனையும் விட்டுவிட்டு ஒதுங்கியிருக்க ஒருவர் விரும்பினால், அது அவருக்கு இவ்வுலக வாழ்க்கை அளித்த பரிசு என்றுதான் நான் நினைக்கின்றேன். காரணம் அதுதான் அவன் வெற்றியினை தேடி பயணிக்கும் உச்ச கட்டம். அத்தகைய மனிதனினால் எவருக்கும் நன்மை இல்லாவிட்டாலும், ஏன் இவ்வுலகுக்கே நன்மை ஏதும் இல்லாவிட்டாலும், அவனால் இந்த உலகத்திற்கு எந்தவொரு தீங்கும், தீமையும் இளைக்கப்படவில்லை என்பதனை நினைக்கின்ற வேளை எனக்கு அவனைப்பற்றி பெருமையாக இருக்கின்றது. ஏனெனில், அவனால் என்னுடய வாழ்விற்கோ, என்னுடைய செயல்பாடுகளுக்கோ எதுவித இடையூறுகளும், இடைஞ்சல்களும் இல்லையல்லவா?

இதனால்தான் சிலருக்கு வாழ்வதை விட சாகப் பிடிக்கின்றது, இன்னும் சிலருக்கு வாழ்ந்து மாளப் பிடிக்கின்றது. சாகப்பிடிக்கின்றவர்களுக்கும் காரணம் இருக்கின்றது. அதாவது, இதனையும் நான் ஒரு தடவை எழுதியிருக்கின்றேன்....

யாருமே இல்லாத
இடமொன்றிற்கு செல்ல வேண்டும்,
அது அடர் வனமாக,
இருள் குகையாக,
எதுவாகவும் இருக்கட்டும்.
ஆனால் ஒரேயொரு பிரச்சினை,
என்னை விட்டுவிட்டு எப்படிச் செல்வது?

இதற்கு உங்களால் விடைகாண முடிந்தால், விடையளிக்க முடிந்தால் நீங்கள் கூறுகின்ற மாதிரி நான் வாழக் கற்றுக் கொள்கின்றேன். இல்லாவிடில்.....? வேறுவழியில்லை விட்டுவிடுங்கள். 

எனது வாழ்க்கைத் துணை..., 

என்னால் சரியாகக் கூற வார்த்தைகள் கிடையாது,
நானும் சிறிது சிறிதாக
காலக்கனதியுடன் சேர்ந்தே,
கரைந்து போகின்றேன்.

இப்படி ஒரு காதல் கிடைக்குமா என்று எனக்கு தெரியாது,
உலகத்தின் கூச்சலுக்கும்,
குழப்பங்களுக்கும் மத்தியில் - நீ
நான் இழந்தேன்.

நான் இறைவனை ஒன்று கேட்க வேண்டும்,
நான் வேண்டியது – உன்னைத்தான்,
என்று அவனிடம் கூற வேண்டும்.

வாசலை எதிர்நோக்குகின்ற வேளை,
இதயத்தின் குதிப்பு துடிப்பாகின்றது.
காரணம் எனக்குத் தெரியும்,
கூடவே வருவது நீ மட்டும்தான்.

எமக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தாலும்,
எந்தவொரு சீதோசனத்தையும்,
எதிர்த்து நிற்கும் ஆற்றல் எமக்குண்டு என்பதும்
எனக்குத் தெரியும்.

எப்போதும் இருப்பது போலவே,
சுவனலோகத்தில் இருப்பதற்காக,
நான் உனக்காகவும் எனக்காகவும்
வேண்டுகின்றேன்.

எனது காதல் உனக்காக எப்போதும் இருக்கும்,
எனது இதயத்தின் திறவுகோலை – நீ
வைத்திருக்கின்றாய்.
நீ அதனை திறந்தாய்,
இனியெப்போதும் - நாம் 
ஒரு பகுதியாக குடித்தனம் நடத்த முடியாது. 

எனது கண்கள் கண்ணீரின் கனதியால்,
ஆனால் நான் அழப்போவது கிடையாது,
இன்னும் - நான்
சா வந்து பீடிக்கும் வரை காத்திரவும் முடியாது.

மிக அவசரமாக அது நடந்தேறும்,
மிகவும் அவசரமாக,
இறைவனின் திருப்பொருத்தத்தினால்,
எனக்கும் உனக்கும்.